கடந்த சில வாரங்களாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.நடராசன் உத்தரவின்படியும், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கிய அறிவுரைகளின் படி கீழக்கரை தாலுகா மற்றும் பிர்க்கா எர்வாடி குருப்பில் உள்ள ஏர்வாடி, ஏர்வாடி தர்கா, காட்டுப்பள்ளி தர்கா,சின்ன ஏர்வாடி, தண்ணீர்ப்பந்தல், வெட்டமனை, ஆதஞ்சேரி, கோகுல்நகர், உள்ளிட்ட பகுதிகளில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளை கீழக்கரை சமூகபாதுகாப்புத் திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா தலைமையில் வீடுவீடாக சென்று சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
இத்தள ஆய்வு பணியில் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் காளிஸ்வரன், கிராம உதவியாளர்கள் சரவணன், பாண்டி ஆகியோர் உடன் சென்றனர். இந்த ஆய்வில் பல வகையான தவறான தகவல்களை கொடுத்து உதவித்தொகை பெற்று வந்தது அறியப்பட்டது.
உதாரணமாக முதியோர் உதவித்தொகை பெற்று வருவதை மறைக்க தன்னை பெற்ற தாயை தன் சகோதரியின் மாமியார் என சொன்ன சத்துணவு அமைப்பாளர், காவல்துறையில் ஏட்டாக பணிபுரிந்து ஒய்வு பெற்றவரின் மனைவி, மின்சார வாரியத்தில் பணிபுரியும் உதவிப் பொறியாளரின் தந்தை உட்பட தகுதி இல்லாமல் உதவித்தொகை பெற்று வரும் பல வேறு பயனாளிகள் கண்டறியப்பட்டனர்.
இது தொடர்பாக கீழக்கரை சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் தமிம்ராஜா அவர்களை தொடர்பு கொண்டபோது, அவர் கூறியதாவது,
1)மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவுப்படி தகுதி அற்றவர்கள் என ஆய்வில் கண்டறியப் பட்டவர்கள் அனைவருக்கும் நடப்பு மாதம் முதல் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவது ரத்து செய்யப்படும். 2)இந்த ஆய்வுகள் தாலுகா முழுவதும் தொடர்ச்சியாக நடத்தப்படும்.
3)தகுதியற்றவர்கள் 100% ஆய்வின் மூலம் கண்டறிப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
4)வாழ்வாதரமே இல்லாமல் நிர்கதியாக நிராதயுதபாணியாக உள்ள தகுதியானவர்கள் இனம் காணப்பட்டு தகுதியானவர்களுக்கு உதவி வழங்கப்படும்.
5)அரசின் நலத்திட்ட உதவிகள் சிந்தாமல் சிதறாமல் தகுதி ஆனவர்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என்றார்.
அரசாங்கத்தின் இச்செயல் மிகவும் பாராட்டக்கூடியது.
You must be logged in to post a comment.