கீழக்கரை தெற்கு தெரு மற்றும் வடக்குத் தெருவில் உயர் அழுத்த மின் கம்பிகளில் உரசி செல்லும் மரக்கிளைகள் – மின்சார வாரியம் ஆபத்தை உணருமா..?

கீழக்கரை தெற்கு தெரு முஸ்லீம் பொதுநல சங்கம் அருகே உள்ள மரத்தின் கிளை அதன் அருகாமையில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகளின் மீது உரசி செல்வதால் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த பகுதி பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடமாக இருக்கிறது. முஸ்லீம் பொதுநல சங்கத்தை சேர்ந்த இளைஞர்களும், வாலிபர்களும் கூடும் பிரதான சாலையாகவும் இருக்கிறது.

தெற்குத் தெரு பள்ளிவாசலுக்கு செல்பவர்களும், பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் கடந்து செல்லும் பாதையாகவும் இது இருக்கிறது. எந்நேரமும் ஆபத்தை விளைவிக்க காத்திருக்கும் உயர் அழுத்த மின் கம்பிகளில் உரசி செல்லும் அதன் கிளைகள் பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது.

இது குறித்து தெற்கு தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா நம்மிடையே பேசும் போது “இந்த பகுதியில் உள்ள மரத்தில் இருந்து செல்லும் கிளைகள் மின் கம்பிகளை உரசி செல்வதால், இரவு நேரங்களில் திடீர் திடீரெனெ வயர்கள் தீப்பிடித்து கருகுகிறது. மேலும் இதனால் வயர்கள் அறுந்து விழும் ஆபத்தும் உள்ளது. மேலும் சில வேளைகளில் டிரான்ஸ்பார்மரில், மின் தடை (FUSE) ஏற்பட்டு விடுகிறது.

இந்த சாலை வழியாக தான் இஸ்லாமியா கல்விகூடங்களுக்கு செல்லும் மாணவ மாணவிகள் செல்கின்றனர். இதனை உடனடியாக சீர் செய்யக் கோரி மின்சார வாரிய அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டு விட்டோம். ஆனால் இன்னும் ஒரு நல்ல வழி பிறக்கவில்லை. கடந்த வாரம் மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாள் முழுதும் மின்சார நிறுத்தம் செய்தனர்.

அப்போதாவது இந்த மரத்தின் கிளைகளை வெட்டியிருக்கலாம். ஆனால் மெத்தன போக்காக இருக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரு மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.” என்று வருத்துத்துடன் பேசினார்.

ஆபத்து ஏற்படும் முன் மின்சார வாரியம் மெத்தனப் போக்கை கைவிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமா..?

இதே போல் வடக்குத் தெருவில் தைக்காவில் இருந்து கொந்தகருணை அப்பா பள்ள செல்லும் வழியிலோ (பழைய PKS CABLE செயல்பட்டு வந்த இடம்) பல வருடங்களாகவே மின் கம்பத்தின் இருந்து செல்லும் மின்கம்பிகள் மரத்தை உரசிக் கொண்டும், நடந்து செல்வோர் தலையை உரசும் அளவுக்கும் உள்ளது.  சமீபத்தில் சாலை போடப்பட்ட பொழுது கூட அதை நிவர்த்தி செய்யாமல், அந்த மின் கம்பத்தை நிரந்தரமாக அகற்ற முடியாத வகையில் கால்வாயுடன் சேர்த்து பூசி வைத்துள்ளார்கள்.

இந்த விசயத்தை பல முறை அப்பகுதியில் பணி புரியும் மின்சார ஊழியர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த பலனும் இல்லை.  கடந்த வாரம் இந்த முன் கம்பத்தின் இருந்து மின்சாரம் இணைப்பு கொடுக்கப்பட்ட வீட்டில் மின்வயர்கள் புகைந்து பெரிய விபத்து ஏற்படும் முன் காக்கப்பட்டது, அதற்கான புதிய மின் வயர்கள் கூட வீட்டின் உரிமையாளர்கள் சொந்த செலவிலேயே மாற்றப்பட்டது மிக வேதனையான விசயம்..

ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால்தான் மின்சார வாரியம் கண் திறக்கும் என்று தெரிகிறது..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..