வெயில் காலம் ஆரம்பித்து விட்டால், எலுமிச்சை பழம் விலையும் உயர்ந்து விடும். ஆனால் தற்போது தமிழகத்தில் எலுமிச்சை பழங்களின் அதிகளவு விளைச்சல் காரணமாக, அவற்றின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி, தென்காசி, குற்றாலம் மற்றும் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை பழம் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதி விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு இப்பகுதியில் வழக்கத்தை விட பல மடங்கு எலுமிச்சை பழம் 4 மடங்கு விளைச்சல் உயர்ந்து சுமார் 200 டன் அளவிற்கு எலுமிச்சை பழம் விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்பட்டுள்ளது.
இங்கு விலை நிர்ணயம் செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதே கோடை காலத்தில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையில் விலைபோனது.
ஆனால் தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழம் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் மட்டும் விலை போகிறது. இதனால் எலுமிச்சை பழம் பறிப்பு கூலி, சந்தைக்கு கொண்டு செல்லும் வாகன வாடகை அனைத்தும் கணக்கு பார்த்தால், விவசாயிகள் எலுமிச்சை பழத்தை விற்றாலும், கையில் இருந்து பணம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தென்காசி பகுதியில் இருந்து எலுமிச்சை பழங்கள் கீழக்கரை நகருக்குள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. கீழக்கரை பீட்சா பேக்கரி அருகாமை சாலையோரங்களில் எலுமிச்சை பழங்கள் கூறு போட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ ரூ.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
ஒரு சிலர் ஊறுகாய் போடுவதற்காக வாங்குகின்றனர். தற்போது, வெயில் ஆரம்பித்து விட்டதால், குளிர் பானங்களுக்கு அதிகம் வாங்கி செல்கின்றனர். சூட்டை தணிப்பதற்கு உகந்ததாக எலுமிச்சை பழம் இருப்பதால், தற்போது, கீழக்கரை பகுதி மக்கள் அதிகளவில் வாங்குகின்றனர்.
You must be logged in to post a comment.