கீழக்கரை நகரில் தற்போது எங்கு பார்த்தாலும் மணல் ஜல்லி, செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் கொட்டி வருவது மட்டுமல்லாமல், புதிதாக போடப்பட்டுள்ள சாலையில் கொட்டி சாலையின் தரத்தை சீர் குலைத்து வருகின்றனர்.
கடந்த நகர் மன்ற தீர்மானத்தின் படி பல இடங்களில் பேவர் பிளாக் சாலைகள் போடப்பட்டுள்ளது. கீழக்கரை நகருக்கு தகுதியற்ற இந்த பேவர் பிளாக் சாலையின் மீது கொட்டப்படும் மணல் கட்டிட ஒப்பந்ததாரர்களால் சரியாக அள்ளப்படாததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒரு நாளுக்கு பத்து பேர் வீதம் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கீழக்கரை சின்னக்கடைத் தெரு சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக மணலை கொட்டிய லாரியை, அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர். இந்த சாலை பள்ளி வாகனங்களும், பொதுமக்களும் கடந்து செல்லும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதனால் இப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து தடைபட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட கட்டிட கான்டராக்டர் இனி இது போன்று நடக்காது என்று உறுதி அளித்ததன் பேரில் லாரி விடுவிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.