கீழக்கரை நகரில் பல இடங்களில் சிதிலமடைந்த மின் கம்பங்களை மாற்றிடக் கோரி கீழக்கரை சட்டப் போராளிகள் தளம், மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக முதலமைச்சரின் தனிப் பிரிவு வலை தளத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், மின்சார வாரியத்திற்கும் தொடர்ந்தது மனுக்கள் வாயிலாக கடந்த 3 மாதங்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் லெப்பை தெரு மதரஸா அருகாமையில் உள்ள மின் கம்பமும் ஒன்றாகும். மனுவில் சுட்டிக் காட்டப்பட்ட பல்வேறு அபாய மின் கம்பங்களுள் ஒரு சில மின் கம்பங்கள் மட்டுமே இதுவரை மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் நெய்னா மாட்டு இறைச்சி கடை எதிரே கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் மின்சார வாரியத்தால் படுக்க வைக்கப்பட்ட மின் கம்பம், இன்னும் லெப்பை தெருவில் நிலை நிறுத்தப்படாமல் படுத்த படியே கேட்பாரற்று கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மின்சார வாரியத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து சேரான் தெருவை சேர்ந்த சட்டப் போராளி நூருல் ஜமான் நம்மிடையே கூறுகையில் ”பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கும் பழைய மின் கம்பங்களை மாற்றாமல் மின்சார வாரியம் இன்னும் மெத்தனப் போக்கில் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து சட்டப் போராளிகள் தளம் வாயிலாக சம்பந்தப்பட்ட மின்சார பொறியாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
You must be logged in to post a comment.