கீழக்கரை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 2016 – 2017 ஆம் ஆண்டிற்குரிய பாதுகாப்பு உபகரணங்களை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் வழங்கினார். நகராட்சியில் முன் எப்போதும் இல்லாத வகையில் துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பாக வேலை செய்ய கையுறை, மாஸ்க், காலணி, தலைப்பாகை, ஒளிரும் சட்டை போன்றவை சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி நன்றி கூறினார். துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஹாஜா, சக்தி, மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
கடந்த காலங்களில் துப்புரவு பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இது போன்று பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அவையெல்லாம் நடைமுறை படுத்தப்படாமல் வெறும் கண் துடைப்பு காரியமாகவே இருந்து வந்தது.
இது சம்பந்தமாக கடந்த 16.12.17 அன்று மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை சட்டப் போராளிகள் சார்பாக நகராட்சி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் சுகாதாரம் மேம்பட்டால்தான் மக்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ முடியும்.
மக்கள் ஆரோக்கியமாக வாழ உழைப்பவர்கள் துப்பரவு பணியாளர்கள் என்கிற அடிப்படையில் நகராட்சி துப்பரவு பணியாளர்களை நோய் பரவாமல் தடுக்க, நகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து பணியாளர்களுக்கு தரமான தடுப்பு கவசங்களை வழங்கி நகராட்சியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணி காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல இடங்களில் தொழிலாளர்கள் முறையாக கையுறை, காலணி, மாஸ்க் அணிந்து வேலை செய்வது இல்லை. வாறுகால், குப்பை அகற்றும் பணியில் தகுந்த பாதுகாப்பு இன்றி வேலை செய்து வருகின்றனர். மேலும் கால்வாய் தூர்வாரும் போதும், குப்பைகளை அள்ளும் போது அதன் மூலம் பல்வேறு நோய்கள் பணியாளர்களுக்கு பரவும் அபாயமான சூழ்நிலை இருந்து வருகிறது.
சில நேரங்களில் நோய் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆகையால் பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுடன் வேலை செய்ய வேண்டிய நிலை இருந்து வருகின்றனர்” இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்தமைக்கு மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை சட்டப் போராளிகள் தளம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.