கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக அகற்றக் கோரி, இன்று 20.03.17 SDPI கட்சி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் நடராஜனை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கும், பேருந்து நிலையம் செல்லும் பொதுமக்களுக்கும், கோயிலுக்கும், வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் மக்களுக்கும் பெரும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை கால தாமதமின்றி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதே போல் மீன் கடை மற்றும் ரேஷன் மண்ணெண்ணெய் நிலையம் ஆகியவை இந்த பகுதியில் தான் அமைந்திருக்கிறது. அங்கு செல்லும் பெண்களும், முதியவர்களும் மிகவும் அச்சத்துடன் சென்று வரும் நிலையும் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்தும் குடிமகன்கள் ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சப்பட வைக்கின்றனர்.
தமிழக அரசு சமீபத்தில் 500 மதுபான கடைகளை அகற்றுவதற்காக உறுதி அளித்தது. அதில் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகாமையில் இருக்கும் கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.
You must be logged in to post a comment.