அலைப்பேசி மற்றும், தொலைபேசி உரையாடல்களை அறிவிப்பு செய்யாமல், பதிவு செய்வது அமீரக சட்டப்படி,சம்பந்தப்பட்டவர் புகார் அளிக்கும் பட்சத்தில்,தண்டனை பெற்றுத் தர முடியும் என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்
உதாரணமாக சமீபத்தில் வாய் மொழி ஒப்பந்தப்படி சேவை பணிகளை (Service) செய்த நிறுவனத்துக்கு ஒரு வருடம் மேல் ஆகியும் வாடிக்கையாளர் ஒருவர் தொகையை செலுத்த முன் வரவில்லை. ஆகையால் ஒரு வாரத்திற்குள் தொகையை திருப்பி செலுத்துவதாக உத்தரவாதம் அளித்த வாடிக்கயாளரின் உரையாடல்கள் அனைத்தையும் ஆதாரங்களுக்காக பாதிக்கப்பட்ட நிறுவனம் ஒலிப்பதிவு செய்து கொண்டது. ஆனால் முன் அறிவிப்பு இன்றி பதிவு செய்த உரையாடலை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிமன்றம் அந்நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
அமீரகத்தில் இது போன்ற வாய் மொழி ஒப்பந்தங்கள் சில நிறுவனங்களுக்கு இடையே பரவலாக நடைபெற்று வருகிறது. அது போன்ற சூழலில் இரு தரப்பினர் மத்தியில் பண பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட சிக்கலுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை அணுகும் பொழுது இரு தரப்பினரின் ஒப்புதலோடு பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் மாறாக அனுமதியின்றி செய்யப்பட்ட உரையாடல்களை கருத்தில் கொள்வது அசௌகரியமான முடிவுகளுக்கு வழி வகுக்கும் என்று சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
ஆகையால் தனி நபர் அல்லது ஒரு குடும்பத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பாதிக்கப்பட்டவர் அறியாத நிலையில் எடுக்கப்பட்ட உரையாடலையோ, புகைபடத்தையோ பொது தளங்களில் பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும், அதற்கு சிறைதண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என்று 1987 ஆண்டின் மத்திய சட்ட எண் 3 ல் 378 பிரிவு விளக்குகிறது. சட்ட விதியின் அம்சங்கள் பின் வருமாறு:
- நேர்முக சந்திப்பிலோ அல்லது தொலைபேசியிலோ நடந்த உரையாடல்களை ஒட்டு கேட்டல், பதிவு செய்தல் & பகிர்தல்.
- மறைமுகமாக எடுக்கப்பட்ட ஒருவரின் புகைப்படத்தை பகிர்தல்.
இது போன்ற கடுமையான சட்டங்கள் மூலம் குற்றங்கள் குறைக்கப்படுவதாகவும், மனித உரிமை மீறல்கள் உறுதி செய்யப்படுவதாகவும் ஒரு புறம் இருந்தாலும் முறையான ஒப்பந்தம் செய்த பின்னரே பணிகளை துவங்க வேண்டும் என்பதே மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.
You must be logged in to post a comment.