இராமநாதபுரம் வட்டார போக்குவரத்து துறை RTO அலுவலகத்திற்கு, தினமும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கவும், உரிமங்களை புதுப்பிக்கவும், வாகனங்களுக்கான ஆண்டு தணிக்கை FC வாங்கவும், அனைத்து போக்குவரத்து சம்பந்தமான சேவைகளை பெறவும், வண்டிகள் மீதான அனைத்து வரிகளையும் கட்டணங்களையும் செலுத்தவும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறுவதற்காகவும் என நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் வெயில் மிக கடுமையாக வாட்ட துவங்கி விட்டது. இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் பொதுக்கள் தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து மனித நேய ஜனநாயக கட்சியின் கீழக்கரை நிர்வாகி ‘கோடை இடி’ முஹீன் கூறுகையில் ”வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திற்குள் ஜீவநதி திட்டம் என்கிற பெயரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தாகத்திற்கு தண்ணீர் குடிக்க அருகில் சென்று பார்த்தால் குடில் மட்டும் தான் இருக்கிறது. குடிநீர் இல்லை.
இங்கு பல்வேறு சேவைகளை பெறுவதற்காக கடும் வெயிலில் காத்திருக்கும் பொதுமக்கள் தண்ணீர் கூட கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். அலுவலக பணியாளர்களுக்கு மாத்திரம் மினரல் வாட்டர் கேன்கள் பிரத்யேகமாக வரவழைக்கப்படுகிறது.
தற்போது நம் மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலங்கங்களிலும் RO பிளான்ட் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தாக்கம் தீர்க்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இது போன்று அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் தாகம் தீர்க்கவும் அரசு உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்று சமூக அக்கறையோடு தெரிவித்தார்.
You must be logged in to post a comment.