இந்தியா முழுவதும் வங்கி கொள்கைகளின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வங்கி கணக்கே வேண்டாம் என முடிவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் வங்கிகளில் நடந்த மோசடிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐசிஐசிஐ முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இரண்டாவது இடத்தில் உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதத்தில் ஐசிஐசிஐ வங்கியில் 1 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேலான தொகைக்கு மோசடி நடந்ததாக பதியப்பட்டுள்ள மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 455 ஆக உள்ளது. இதேபோல் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை எஸ்பிஐ வங்கியில் 429 ஆகவும், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியில் 244 ஆகவும், ஹெச்டிஎப்சி வங்கியில் 237 ஆகவும் உள்ளது. மேலும் இதே காலக்கட்டத்தில் ஆக்ஸிஸ் வங்கியில் 189 மோசடி வழக்குகளும், பாங்க் ஆப் பரோடா வில் 176 மோசடி வழக்குகளும், சிட்டி வங்கியில் 150 மோசடி வழக்குகளும் நடந்துள்ளன.
இருப்பினும் மோசடிகளின் மதிப்பு அடிப்படையில் பார்க்கையில் எஸ்பிஐ வங்கியில் ரூ.2,236.81 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளன. அடுத்ததாக பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.2,250.34 கோடிக்கும், ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.1998.49 கோடிக்கும் மோசடிகள் நடந்துள்ளன.இந்த பட்டியலை நிதி அமைச்சகத்திடம் ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. இந்தப் பட்டியல் மட்டுமல்லாமல் மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகளின் பட்டியலையும் அளித்துள்ளது.
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை சேர்த்து மொத்தம் 450 வங்கி அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மொத்தம் 3,870 மோசடிகள் வங்கிகளில் நடைபெற்றுள்ளன. இந்த மோசடிகளின் மொத்த மதிப்பு ரூ. 17,750.27 கோடி என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.
2 comments
உள்ளதை உள்ளதென்றும்,இல்லாததை இல்லாததென்றும் உலகிற்கு இணையத்தின் பக்கம் மூலம் உறக்க சொல்லும் கீழை நியூஸ்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நிச்சயமாக உண்மையை உரக்க சொல்ல எங்களால் இயன்ற வரை முயற்சி செய்வோம்
Comments are closed.