கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை நெய்னா மாட்டு இறைச்சிக்கடை அருகே நான்கு வழி சாலையில் ஏற்கனவே வேகத் தடை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நெடுஞ்சாலை துறையினரால் புதிய சாலை அமைக்கப்பட்ட போது, இந்த இடத்தில வேகத் தடை அமைக்காமல் விடுபட்டுள்ளது.
இது சம்பந்தமாக இஸ்லாமிய கல்வி சங்கம், மக்கள் நல பாதுகாப்பு கழகம் பல்வேறு மனுக்களை மாவட்ட நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலை துறையினருக்கும் கடந்த மாதம் அனுப்பியுள்ளனர். ஆனால் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் உடனடியாக இந்தப் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் வேகத் தடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரி, இஸ்லாமிய கல்வி சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான பகுதி இளைஞர்கள் பங்கேற்று கையெழுத்திட்டு வருகின்றனர்.
இது குறித்து இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பொருளாளர் சட்டப் போராளி ஹமீது சல்மான்கான் கூறுகையில் ”இச்சாலை எந்நேரமும் வாகனப் போக்குவரத்து நிறைந்த நகரின் பிரதான சாலையாக இருக்கிறது. இங்கு வேகத் தடை இல்லாததால் இருசக்கர வாகனங்கள் அதி வேகத்துடன் செல்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகளில் பலர் சிக்கி துயரமடைந்து வருகின்றனர்.
அதே போல சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளி அருகாமையிலும் வேகத் தடை அமைக்காமல் உள்ளது. இதனால் பள்ளி சிறுவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். பலமுறை மனு செய்து விட்டோம். தற்போது கையெழுத்து இயக்கம் துவங்கி இருக்கிறோம். இதனை நாளை நடக்கவிருக்கும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் ஆட்சியரை நேரடியாக சந்தித்து கையெழுத்துக்களை இணைத்து மனு கொடுக்க இருக்கிறோம்” என்று சமூக அக்கறையுடன் தெரிவித்தார்.
You must be logged in to post a comment.