தமிழக மீன் வளத் துறையினரை கண்டித்து 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கினர்

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி மற்றும் சுருக்கு மடி, அதிக எச்.பி கொண்ட விசைத் திறன் கொண்ட படகுகள் ஆகியவற்றை தடுக்க தவறிய மீன் வளத்துறையைக் கண்டித்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று 03.03.17 வெள்ளிக்கிழமையிலிருந்து கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்காள விரிகுடா, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் கடல் வளம் அழிவதுடன் மீன்களின் இனப்பெருக்கமும் அழிக்கப்படுகிறது. இதனால் இந்த வலைகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி 5 மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சர்வ சாதாரணமாக இந்த  வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர்.

பாக் ஜலசந்தி கடற்பகுதிக்குட்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகைப்பட்டிணம், திருவாரூர் ஆகிய கடல் பகுதிகளில் இதனை தடுக்க வேண்டிய மீன்வளத்துறையோ தடைசெய்யப்பட்ட வலைகளை பயன் படுத்தும் மீனவர்களுக்கு ஆதரவாகவும் இதனை கண்டு கொள்ளாமலும் இருப்பதாக இப்பகுதி மீனவ மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . இந்த மீனவ மக்களின் நியாயமான போராட்டத்திற்கு மீன் வளத் துறை செவி சாய்க்குமா..?

புனித ரமலான் வாழ்த்துக்கள்..