புது மடம் கடற்கரை அருகே 125 வயது அபூர்வ ஆமை கரை ஒதுங்கியது

இறைவனுடைய படைப்பில் உலகிலேயே அதிக வருடம் உயிர் வாழக்கூடிய உயிரினமும், உலகின் மிக அரியவகை ஆமைகளில் ஒன்றான 125 வயதுள்ள தோணி ஆமை ஒன்று புதுமடம் கடற்கரை அருகே நேற்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தோணி ஆமைகள் கடல் ஆமைகளிலேயே மிகப் பெரியதும், அதிக எடை கொண்டதும் ஆகும். அதிகப்பட்சமாக 800 கிலோ எடையும் ஒன்பது அடி நீளம் வரையிலும் வளரக்கூடியது. இந்த வகை ஆமைகள் அழகு சாதனப் பொருட்களுக்காகவும், மாமிசத்துக்காகவும் அதிகளவில் வேட்டையாடப்படுவதால் மிக வேகமாக அழிந்து வரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நம் இந்தியக் கடற்பகுதிகளில் பங்குனி ஆமை, அலுங்கு ஆமை, பெருந்தலை ஆமை, ஓங்கில் ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய ஐந்து வகை ஆமைகள் காணப்படுகின்றன. இதனை ஆய்வு செய்த மண்டபம் வனச்சரகர் கூறுகையில், ”உலகின் மிகப் பெரிய கடலாமையான தோணி ஆமை உலகில் அதிக வயது வரையிலும் வாழக்கூடிய உயிரினமும் ஆகும். பெண் தோணி ஆமைகள் முட்டையிடுவதற்காக 6000 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் நீந்தக் கூடியது. சுமார் 500 முதல் 1,000 மீட்டர் கடலின் ஆழம் வரையிலும் 30 நிமிடம் வரையிலும் மூச்சு பிடித்து நீந்தும் திறன்கொண்டவை.

கணவாய் மீன், ஜெல்லி மீன் ஆகியவனை இதற்கு விருப்பமான உணவாகும். கடலில் குப்பையாக கொட்டப்படும் பிளாஸ்டிக் பைகளை கணவாய், ஜெல்லி மீன்கள் என நினைத்து தோணி ஆமைகள் சாப்பிட்டு விடுவதுண்டு இதனால் இவை வேகமாகவும் அழிந்து வருகிறது. கரை ஒதுங்கிய தோணி ஆமையின் நீளம் 1.50 மீட்டர்; அகலம் 1.35மீட்டர், சுற்றளவு 2.68 மீட்டர் கொண்ட இதன் எடை 250 கிலோவாகும். பாறையில் அடிபட்டு இறந்திருக்க வாய்ப்புகள் உள்ளது” என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..