கீழக்கரை நகராட்சியில் வீடுகளுக்கு வந்து வரி வசூல் செய்பவர்கள், முறையாக இரசீது போட்டுக் கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக, பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு கிழக்குத் தெரு பகுதியில் வரி வசூல் செய்த நகராட்சி ஊழியர் பொதுமக்களிடம் இருந்து வரி வசூல் செய்து கையாடல் செய்ததாக பல்வேறு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டு, நகராட்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் இது போன்ற புகார்கள் எழுந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கீழக்கரை நகர் த.மு.மு.க தலைவர் சிராஜுதீன் கூறுகையில் ”சமீப காலமாக கீழக்கரை நகராட்சி ஊழியர்கள் சில பேர் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் வீட்டுவரி கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பெற்றுக் கொண்டு பணத்தை கருவூலத்தில் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே இனிமேல் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் எந்த வரி இனமாக இருந்தாலும், தனியார் கையில் பணத்தை கொடுக்கவேண்டாம். அது நகராட்சி ஊழியராக இருந்தாலும் சரியே.. மேலும் பொதுமக்களே நேரடியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் பணத்தை செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். யாராவது இப்படி பணத்தை கொடுத்து ஏமாந்து இருந்தால் உரிய ஆதாரத்துடன் கீழக்கரை தமுமுக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இது போல் நகராட்சி நிர்வாகத்தின் நற்பெயரை சீர்குலைக்கும் விதமாக செயல்படும் ஊழியர்கள் மீது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையர் முன்வர வேண்டும் என்பது தான் அனைத்து சமுதாய பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
You must be logged in to post a comment.