கீழக்கரை நகராட்சியின் ‘நகைச்சுவை’ அறிவிப்புக்கு பொது மக்கள் பதில் கொடுக்க ‘கீழக்கரை மக்கள் களம்’ வேண்டுகோள்

கீழக்கரை நகராட்சியின் ‘நகைச்சுவை‘ அறிவிப்புக்கு பொது மக்கள் பதில் கொடுக்க ‘கீழக்கரை மக்கள் களம்’ வேண்டுகோள்

கீழக்கரை நகரராட்சி சார்பில் பொது மக்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கீழக்கரை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் (வார்டு எண் 1 முதல் 21 வரையிலான பகுதிகளில்) ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், கீழக்கரை பகுதியில் எந்த இடத்திலும், எவரும் மலம், ஜலம் திறந்தவெளியில் கழிக்காமல் சுகாதாரத்தை மிக சிறப்பாக பேணுவதாலும், நகராட்சி நிர்வாகம் பொது கழிப்பிட வசதிகளை நகரெங்கும் உலகமே போற்றும் படி அமைத்து தந்த படியாலும், OPEN DEFECATION FREE TOWN என்கிற பார் போற்றும் பட்டத்தை விரைவில் அரசுப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் எவருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 10 நாள்களுக்குள் கடிதம் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம் என்று நகராட்சி ஆணையாளர் நகைச்சுவை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ள கழிப்பறை 

இது குறித்து கீழக்கரை மக்கள் களத்தின் துணைத் தலைவர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் கூறும் போது ”கீழக்கரை கலங்கரை விளக்கம் பகுதியில் நேற்று தான் நம்ம டாய்லெட் அமைப்பதற்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த வேலைகள் முடிவடைந்து நல்ல முறையில் தண்ணீர் வசதி செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தான் திறந்த வெளியில் மலம் கழிக்கப்படாதது என்று இந்த பகுதியில் உறுதி செய்யப்பட முடியும். கலங்கரை விலக்கம் கடற்கரை பகுதிகளில் இன்றும் காலை நேரங்களில் திறந்த வெளி கழிப்பிடங்கள் எவ்வித இடையூறும் இன்றி செயல் பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் இன்னும் பல்வேறு வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால் ஏழை எளிய மக்கள்; வேறு வழியின்றி இது போன்று கடற்கரை, மயான பகுதிகளை திறந்த வெளி கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

60000 மக்கள் தொகை கொண்ட நம் கீழக்கரை நகரில் 3 பொது கழிப்பிடங்கள் மட்டுமே உள்ளது. தற்போது நமது நகரம் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் போதுமான பொதுக்கழிப்பிடம் இல்லாததால் வெளியூரிலிருந்து அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அவசர உபாதைகளை சரி செய்து கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதற்காக மலேரியா கிளினிக் பின்புறம் நகராட்சி சார்பில் பொது கழிப்பிடம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இவையெல்லாம் பயன்பாட்டுக்கு வந்தபிறகு இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டால் கீழக்கரை வாசிகள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். ஆனால் தற்போது நகராட்சியின் இந்த அறிவிப்பு முகம் சுளிக்கும் அளவிற்கே இருக்கிறது. ஆகவே வெளிநாடு வாழ் கீழக்கரை சொந்தங்கள், நண்பர்கள் நகராட்சி சார்பாக வெளியிடப்பட்டு இருக்கும் அறிவிப்புக்கு தகுந்த பதிலை அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உண்மையை நிலைநாட்டுமாறும், உடனடியாக நம்ம டாய்லெட் திட்டம் உள்ளிட்ட பொது கழிப்பறை திட்டங்களை உடனடியாக நகராட்சி நிர்வாகம் செயல்படுத்த அறிவுறுத்துமாறும் கீழக்கரை மக்கள் களம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்றார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

2 Comments

  1. ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக.
    கீழக்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 21 வரையிலான வார்டு பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்த வெளி கழிப்பிடங்களற்ற நகராமாக மாற்ற கீழக்கரை நகராட்சி முடிவெடுத்துள்ளதாக அறியப்பெற்றேன், மிக்க மகிழ்ச்சி அதே்நேரத்தில் கீழக்கரையில் கழிவரைகள் இல்லாத வீடுகளை கண்டறிந்து அந்த வீடுகளுக்கு நகராட்சி மூலமோ இல்லை தொண்டு நிறுவனங்கள் மூலமோ இலவசமாகவோ, மானியமாகவோ, அமைத்து கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும் கடற்கரை பகுதி, கீழக்கரை பொது மயானவாடி ஓரங்கள், சாலை ஓரங்களிலோ திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களை பிடித்து முதலில் எச்சரிக்கை விடுத்தும், மீண்டும் இதுபோல் செய்தால் அபாரதம் விதித்தோமேயானால் மற்றவர்களுக்கு இது எச்சரிக்கையாக இருக்கும். மேலும் தற்போது நகராட்சி மூலம் ஆங்காங்கே வைத்திருக்கும் நம்ம toilet ஐ முறையாக பராமரித்தும், அன்றாடம் சுத்தப்படுத்தவும் துப்புரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கவும் இல்லையே நம்ம toilet வைத்து ஒரு புரோயஜனமில்லை என்பதை இதன்மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறேன்

  2. ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில்(Csi churchபின்புறம்) திறந்த வெளி ஜலம் கழித்தல் நகராட்சியின் கண்களுக்கு பட வில்லையோ?

Comments are closed.