கீழக்கரை கிழக்குத் தெரு ஜமாஅத் சார்பாக கிழக்குத் தெரு பகுதிகளில் 4 வது வார்டு மற்றும் 5 வது வார்டு சுகாதார பணிகள் சிறப்பாக தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் இந்த ஜமாஅத் சார்பாக கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வருகிறது.
கீழை நகர் துப்பரவு பணியாளர்களின் பற்றாகுறை காரணமாக பல இடங்களில் சுகாதாரக் குறைகள் காண முடிகிறது. இதை முறியடிக்கும் வண்ணம் கிழக்குத் தெரு ஜமாஅத் பணியில் இறங்கியது போல் அரசின் உதவிகளை மட்டும் நம்பி இருக்காமல் நம்மால் இயன்ற உதவிகளை அரசாங்கத்துக்கு வழங்குவதன் மூலம் நம்முடைய தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். சுருக்கமாக சொல்வதென்றால் நமக்கு அரசாங்கம் என்ன செய்தது என்று எண்ணாமல், நாமும் பங்களிப்பை வழங்கினால் நம்முடைய தேவைகளை உரிமையுடன் போராடி பெற முடியும்.
இது பற்றி சுகாதாரப்பணிகளை தொய்வன்றி மேற்கொள்ளும் கிழக்கு தெரு ஜமா அத் உதவி பொருளாளர் முஹம்மது அஜிகர் கூறுகையில், கடந்த 2012ம் ஆண்டு ஜமாஅத்தின் முயற்சியால் ஆரம்பம் செய்யப்பட்டது, மேலும் இப்பணிகளுக்காக வருடம் 6 லட்சம், அதாவது மாதம் 40 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. மேலும் இப்பணிகளுக்காக ஐந்து நிரந்தர பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, இவ்வேலைக்கு தேவையான மருந்து தெளிப்பான் உபகரணங்கள், கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் மற்றும் பிற சுத்தம் செய்யும் பொருட்களும் வாங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் ப.அ.சேகு அபூபக்கர் மற்றும் நிருவாகிகளின் ஆலோசனையின் பேரில் ஜமாஅத் செயலாளர் செய்யது இபுனு மௌலானா உதவி பொருளாளர் முஹம்மது அஜிகர் ஆகியோர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் இந்த சுகாதார பணிகளால் இந்த பகுதி பொதுமக்கள் மாபெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த முன்னுதாரமான செயலை கீழை நியூஸ் நிர்வாகக் குழு மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
You must be logged in to post a comment.